கல்வான் சண்டையில் பலியான வீரரின் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி!

லடாக் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி, துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது.

சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இந்நிலையில், இத்தாக்குதலில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த, தெலுங்கானாவைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு, துணை கலெக்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அம்மாநில சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.சந்தோஷிக்கு ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் பணி வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அவரது பணிகள் அனைத்தும் தெரியும் வரை கலெக்டர் அலுவலகத்தில் இருப்பவர்கள் அவருக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு 711 சதுர அடியில் வீடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ராணுவ வீரரின் குடும்பத்தை சேர்ந்த 20 பேர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே