தமிழகத்தில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு துறைகளில் முடக்கம் ஏற்பட்டு ஏராளமான பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தின் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் இந்த பேரிடர் காலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடமாடும் பால்வண்டி முகவர்களை நியமித்துள்ளது.
முதற்கட்டமாக நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நடமாடும் ஆவின் நிறுவனம் சேர்ந்து உள்ளது.
இதன் மூலம் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களில் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையிலும், தற்போது வருமானம் இன்றி தவிக்கும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்திற்காக ஆவின் நிறுவனம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆவின் நிறுவனம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நிறுவனத்தில் பால் முகவர்களாக ஆவதற்கு பத்தாயிரம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்பதை தற்போது ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.
இதனால் மேலும் 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பால்வண்டி முகவர்களாக மாறுவதற்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலர்களிடம் ஆயிரம் ரூபாயை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்புத்தொகை செலுத்தி உடனடியாக நடமாடும் பால்வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.