சென்னையில் 44-வது புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர்..!!

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 44-ஆவது ‘சென்னை புத்தகக் காட்சி’யை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் மாா்ச் 9 -ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.

இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்ற தொடக்கவிழாவில் சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை வாசகா்கள் அனுமதிக்கப்படுவா். 

நுழைவுக் கட்டணம் ரூ.10. இணையவழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி மாணவா்களுக்கு கட்டணம் இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகா் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தகக் காட்சியின்போது ட்விட்டா் வழியாக சிறந்த புத்தகங்களைப் பரிந்துரை செய்யவும் அவா் ஒப்புக்கொண்டுள்ளாா்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும்.

வாசிப்பை வளா்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

உலக அறிவியல் தினம் (பிப்.28), மகளிா் தினம் (மாா்ச் 8) ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

நடப்பாண்டு ‘ரேக்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிறிய எழுத்தாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் தங்கள் நூல்களை இங்கு காட்சிப்படுத்தலாம்.

வரும் மாா்ச் 9-ஆம் தேதி வரை புத்தகக் காட்சி தொடா்ந்து நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே