டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் என்ற கணிப்பால் பீதி நிலவுகிறது.
இதனிடையே சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய டெல்லி அரசு அமைத்த வல்லுநர்கள் அடங்கிய 5 நபர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், இம்மாத இறுதியில் டெல்லியில் 15,000 படுக்கைகளுக்கான தேவை ஏற்படும் என்றும்; அதுவே அடுத்த மாதம் மத்தியில் 42,000 படுக்கைகளுக்கான தேவையாக மாறும் அபாயம் உள்ளதாக வல்லுநர் குழு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அனைத்து உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தேசிய தலைநகரில் நாளை முதல் திறக்கப்படும் என்றும்; டெல்லி எல்லைகளும் நாளை முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதே சமயம், டெல்லியில் ஹோட்டல் மற்றும் விருந்து அரங்குகள் திறக்க அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், ஜூன் மாத இறுதிக்குள், டெல்லிக்கு 15,000 படுக்கைகள் தேவைப்பட உள்ளதால், டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.
அதே நேரத்தில் மத்திய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளில் வெளி மாநிலத்தவர்களுக்கும் அனுமதி உண்டு.
நரம்பியல் அறுவை சிகிச்சை போன்ற சிறப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நோயாளிகளை தவிர தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளும் டெல்லி குடியிருப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட 70% கொரோனா செஸ் வரியை திரும்ப பெறப்படுகிறது.
ஜூன் 10ம் தேதி சிறப்பு செஸ் வரி கிடையாது.
கொரோனாவால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வயதானவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன், குறிப்பாக குழந்தைகளுடன் குறைந்தபட்ச தொடர்பு கொள்ள வேண்டும், வீட்டின் ஒரு அறைக்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.