இந்திய வகை வைரஸ் என்ற பதிவுகளை நீக்கிடுக – சமூக வலைத் தளங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!!

‘இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்’ என்ற தவறான வார்த்தையை நீக்க வேண்டும் என, பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 13ம் தேதி, ‘உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரசில் உருமாற்றம் அடைந்த பி.1.6.17 எனும் வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது’ எனத் தெரிவித்தது. ஆனால், ‘இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை.

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் அவ்வாறான வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அனைத்து சமூக ஊடகங்களுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் எனும் வார்த்தையை உடனடியாக உங்கள் தளத்திலிருந்து நீக்க வேண்டும். 

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் எனும் வார்த்தை முற்றிலும் தவறானது.

இது நாட்டின் மரியாதைக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. அந்த வார்த்தையை உலக சுகாதார அமைப்பு ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

உலக சுகாதார அமைப்பு உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 எனும் வைரஸ் மட்டுமே எனத்தான் தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மத்திய அரசு கூறியிருப்பது போல் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் எனும் வார்த்தையை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்குவது சாதாரணமானது அல்ல.

லட்சக்கணக்கான பதிவுகள் இருக்கின்றன. அதில் இந்த குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் நீக்குவது கடினமான பணி’ என, தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே