மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது..!!

‘புரெவி’ புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து விட்டதால், மிக கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

நான்கு மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

இந்த காற்றழுத்த பகுதி, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, ராமநாதபுரம், துாத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களில், அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் மேகமூட்டமாக காணப்படும். 

நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை, இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

அதிகபட்சம், 30; குறைந்தபட்சம், 24 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.

தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.

எனவே, இன்று அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு: முத்துப்பேட்டை, 10; மாமல்லபுரம், 7; குடவாசல், நன்னிலம், தலைஞாயிறு, 6; திருத்துறைப்பூண்டி, செய்யூர், கொள்ளிடம், சோழவரம், திருப்பூண்டி, சிதம்பரம், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.சோழிங்கநல்லுார், செங்குன்றம், பேராவூரணி, நாகை, தஞ்சை, வேதாரண்யம், பூண்டி, பரங்கிப்பேட்டை, மன்னார்குடி, மதுக்கூர், செம்பரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, திருத்தணியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே