சாத்தூர் அருகே வெடிவிபத்து – உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் என்ற பெரியரில் பட்டாசு ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இதில், ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் உள்பட 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மாரியம்மாள் தவிர மற்ற 11 பேரும் யார் என்பதும் அவர்களது பெயர், விவரம் குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை.

இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் மற்றும் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம்பட்ட நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், எஸ்.பி. பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும், விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே