தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச வகுப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வு எனப்படும் நீட் தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள 2017ம் ஆண்டு முதல் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டிற்கான பயிற்சியானது நவ.,1ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுபற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ” கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடம் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

அதற்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட உள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புகின்ற மாணவ மாணவிகள் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை பெற்று உடனடியாக பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த இலவச ஆன்லைன் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே