கஸ்டடி மரணம் : காவல்துறை வழிகாட்டுதல் இன்றி தடுமாறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ட்வீட்

சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39).இவருக்கு பிரேமா என்ற மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே கடந்த 30-ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் நெய்வேலி போலீசார் செல்வமுருனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்பு ,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.ஆனால் கடந்த 4-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனால் போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் செல்வமுருகன் உயிரிழந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் முருகனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

போராட்டத்தின்போது ,பிரேத பரிசோதனை முடிவுக்கு பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மற்றும் தாசில்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை – செல்வமுருகன் என்பவர் பலி.முதலமைச்சர் அவர்களின் பொறுப்பில் இருக்கும் காவல்துறை வழிகாட்டுதல் இன்றி தடுமாறுகிறது. இதையும் வழக்கம் போல் மறைக்க முயலாமல் தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே