தமிழகத்தில் ஊரடங்கு நவ.30 வரை நீட்டிப்பு..!! எவை இயங்கும்?? எவை இயங்காது??

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 9, 10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகள்கள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 16ஆம் தேதி முதல் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி
செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது .

சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது .

நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் , பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும் , ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் , வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி வரும் 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது .

மதம் சார்ந்த கூட்டங்கள் , சமுதாய , அரசியல் , பொழுதுபோக்கு , கலாச்சார நிகழ்வுகள் , கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் வரும் 16ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் , நடத்த அனுமதி. பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வரும் 10-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.

திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதி.

நவம்பர் 1 முதல் 50 முதல் 60 வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான
தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை தொடர்கிறது.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பாஸ் முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே