பிரிட்டனில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக உலகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை சந்தித்து வருகிறது.
இதுவரை வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இருப்பினும் பொருளாதார பாதிப்பு காரணமாக கொரோனாவுக்கு மத்தியில் ஊரடங்கு நடைமுறைகளை தளர்த்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முடிவெடுத்துள்ளன.
இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது.
இதனிடையே நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த சூழலில் ஊரடங்கை தளர்த்துவதற்கான நேரம் இது இல்லை, எனவே ஊரடங்கு ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் அதன்படி இன்று முதல் அலுவலகத்துக்கு ஊழியர்கள் பணிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
புதன் கிழமை முதல் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி மற்றும் பூங்காங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
சமூக இடைவெளியை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றார்.
மேலும் ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் கடைகள் மற்றும் மழலையர் பள்ளிகளை திறக்கவும் அனுமதியளிக்கப்படும் எனவும் கொரோனா பாதிப்புகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.