தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தற்பொழுது ‘உருமாறிய கரோனா’ தொற்று பரவிவரும் சூழலில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளையும், சில தளர்வுகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதிவரை ஏற்கனவே நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘உருமாறிய கரோனா’ வைரஸின் தாக்கத்தைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தளர்வுகளின்றி ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஜனவரி 16-ஆம் தேதி காணும் பொங்கலுக்கு சென்னை மெரினா உட்பட எந்தக் கடற்கரையிலும் மக்களுக்கு அனுமதியில்லை. 

வழிபாட்டுத் தலங்களில் நேர நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தரிசனம் செய்யலாம்.

ஜனவரி 1 -ஆம் தேதி முதல் 200 பேர் வரை பங்கேற்கும் சமுதாய, அரசியல் பொதுக்குழு கூட்டம், விளையாட்டு, கலாச்சாரம், கல்வி, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.

திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள், உள் அரங்கு மற்றும் வெளியரங்குகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் உச்சவரம்பின்றி பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.

‘உருமாறிய கரோனா’ காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு (இ-பாஸ்) அவசியம். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வர இ-பதிவு தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தளர்வுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என அரசு அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். நோய்த் தொற்று குறைந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே