மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா தொற்று

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரு கிறது. அந்த மாநிலத்தில் ஒரே நாளில் 23,179 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத்திலும் வைரஸ் தொற்று ஏறுமுகமாக உள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாவதை தடுக்கவேண்டும் என்று அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் பிரதமர்நரேந்திர மோடி அறிவுறுத்தியுள் ளார். குறிப்பாக மகாராஷ்டிராவில் தினசரி கரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் 23,179 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மிக அதிகபட்சமாக நாக்பூரில் 3,405பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு தற்போது முழுஊரடங்கு அமலில் உள்ளது. தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊடரங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மகாராஷ்டிராவில் 1,54,036 கரோனா நோயாளிகள் உள்ளன. இது நாட்டின் மொத்த கரோனாநோயாளிகளில் 60 சதவீதம் ஆகும்.

முதல்வர் அவசர ஆலோசனை

மகாராஷ்டிர தலைநகர் மும்பை, நாக்பூர், புனே உள்ளிட்ட பெருநகரங்களில் கரோனாஅதிவேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கிராமங்களுக்கும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் கரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.

கடந்த சில மாதங்களை ஒப்பிடும்போது கேரளாவில் தினசரி கரோனா தொற்று சற்று குறைந்திருக்கிறது. எனினும் அந்த மாநிலத்தில் வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. அங்கு நேற்று முன்தினம் 2,098 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மருத்துவமனைகளில் 25,698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பஞ்சாபில் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கு அடுத்து கர்நாடகாவில் 1,275 பேருக்கும், குஜராத்தில் 1,122பேருக்கும் தொற்று ஏற்பட்டிருக் கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 10,63,379 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 23.03 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் கரோனா தடுப்பூசிபோடும் பணியும் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி ஒரே நாளில் 20.78 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 3.71 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்டி ருக்கிறது. டெல்லியை ஒட்டிஅமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் காஜியாபாத், கவுதம் புத்தாநகர் பகுதிகளில் கரோனா பரவலை தடுக்க 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவும் 9 மாவட்டங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை5 மணி வரை இரவு நேர ஊரடங்குஅமல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் இனிமேல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என்று முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பேருந்து சேவை ரத்து

கரோனா வைரஸ் பரவலை தடுக்க குஜராத்தின் அகமதாபாத் நகரில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பூங்கா, ஜிம், கிளப் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. அகமதாபாத், வடோதரா,ராஜ்காட், சூரத், காந்திநகர், ஜாம்நகர், பாவ்நகர், ஜுனாகத் ஆகிய 8 மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 10-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே