சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போதுதான் எனது கரோனா பரிசோதனை முடிவு வந்தது. எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
லேசான அறிகுறியே இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
என்னுடன் சமீப நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி. சிவகங்கையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து கார்த்தி சிதம்பரம் பல மாவட்டங்களுக்கும் சென்று நிவாரண உதவிகளை வழங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரமும் பாதிக்கப்பட்டுள்ளார்.