கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கொச்சி மாநகராட்சியில் காங்., மேயர் வேட்பாளர் வேணுகோபால், பாஜ., வேட்பாளரிடம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
கேரளாவில் கடந்த 8, 10, 14ம் தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
3 கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி, காங்., கூட்டணி, பா.ஜ., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.தொடக்கம் முதலே இடதுசாரிகள் கூட்டணி அனேக இடங்களில் முன்னிலை வகித்தன.
இதனிடையே கொச்சி மாநகராட்சித் தேர்தலில் வடக்கு தீவு (நார்த் ஐலாண்ட்) வார்டில் காங்., மேயர் வேட்பாளர் வேணுகோபால், பாஜ., வேட்பாளரிடம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.
கொச்சி மாநகராட்சியில் முக்கிய வேட்பாளரான வேணுகோபால் தோல்வியடைந்ததால் காங்., அதிர்ச்சியடைந்துள்ளது.