அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நேற்று பாஸ்டனில் உள்ள கொலம்பஸ் சிலையின் தலையை போராட்டக்காரர்கள் துண்டித்துள்ளனர்.
அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கருப்பினத்தவர் ஒருவர் மீது காவல்துறையினர் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலில் அந்த நபர் பரிதாபத்திற்குரிய முறையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து இனவெறி தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதோடு காலணிய ஆதிக்கத்தின் அடிமைத்தனத்தினை நினைவுகூரும் சிற்பங்களையும், சின்னங்களையும் தொடர்ச்சியாக தகர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பாஸ்டன் நகரத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், இனவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அங்கிருந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையின் தலையை தனியாக துண்டித்தனர்.
இதேபோல மியாமி மற்றும் விர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள கொலம்பஸ் சிலையையும் மக்கள் தகர்த்து ஏரியில் வீசியுள்ளனர்.
போராட்டக்காரர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள போஸ்டன் நகர மேயர் மார்டி வால்ஷ், தலை துண்டிக்கப்பட்டுள்ள சிலை அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் இனவாதத்துக்கு எதிரான போராட்டத்திலும் காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகள் தகர்த்தெரியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.