சபரிமலைக்கு செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி சபரிமலையில் நடை திறக்கப்பட்டது.
தினந்தோறும் ஏராளமான ஆண்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கோயிலுக்கு செல்ல முயன்ற ஒருசில பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை கொச்சி விமான நிலையம் வந்தார்.
அவருடன் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்களும், கடந்த ஆண்டு சபரிமலை செல்ல முயன்ற கேரள பெண்களான பிந்து அம்மிணி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
ஆலுவா காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவலை தெரிவித்த அவர்கள், சபரிமலைக்கு புறப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், பாதுகாப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் சபரி மலை கோயிலுக்கு செல்வது உறுதி என்றார்.
காலை 5 மணிக்கு கொச்சி நெடும்பாசசேரி விமான நிலையத்தில் வந்த திருப்தி தேசாய் மற்றும் பூமாதா பிரிகேட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் ஆலுவா எஸ்.பி அலுவலகத்தில் சென்று தகவல் அளித்த பின் கார் மூலம் பம்பா நோக்கி புறப்பட்டு சென்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது, ஐயப்ப கர்ம சமிதி அமைப்பினர், பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே தூவினர். மேலும் அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இரண்டு பேரையும் போலீஸ் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். திருப்தி தேசாய் உட்பட 5 பெண்களை கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து சென்றனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.