முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி நிதி வந்துள்ளது..!!

கரும்பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் பொருளாதார முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று வரை ரூ.280.20 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்ததை இதுவரை பெறப்பட்டுள்ள நிதியில் இருந்து ரெம்டெசிவர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும் , மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்கு தேவையான கன்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்டிபிசிஆர் கிட்களை வாங்குவதற்கு ரூபாய் 50 கோடியை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதையடுத்து சிப்காட் நிறுவனம் மூலம் சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். தற்போது கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே