விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளூம் கொடூரம் தமிழகத்தில் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், நேரடி சூதாட்டத்திற்கு தடையுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்து வருவதாகவும், பொழுதுபோக்குக்காக செல்லும் இளைஞர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்

ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டங்கள் அதை விட ஆபத்தானது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியுள்ளார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே