புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை..!!

புயல் சேத மதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு நாளை (டிச.5) தமிழகம் வருகிறது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு சேத மதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிவர் புயல் தமிழகத்தில் பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

புயலின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து நிவாரணத் தொகையின் மதிப்பீட்டினை அறிவிப்பதற்காக மத்தியக் குழு நவம்பர் 30-ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் தமிழகம் வரவிருந்த மத்தியக் குழுவின் வருகை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே தெற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல், ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே வியாழக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்க தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலையில் முழுமையாகக் கடந்தது.

இந்நிலையில் புயல் சேத மதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வரவுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 8-ஆம் தேதி வரை தங்கியிருந்து புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்தியக் குழு ஆய்வு செய்யவுள்ளது.

நாளை மதியம் 3.30 மணிக்கு சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்தியக் குழு சந்திக்கிறது.

பின்னர் டிசம்பர் 6-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மத்தியக் குழு ஆய்வுப் பணிகளைத் தொடங்குகிறது.

டிசம்பர் 7-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதங்களை ஆய்வு செய்கிறது.

சேதமடைந்தவா்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பதைக் கணக்கிட்டு அதுகுறித்த அறிக்கையை மத்திய அரசிடம் குழுவினா் வழங்கவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே