சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கோரி வழக்கு: மத்திய அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்து மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டுமென, தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக் கோரி பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடும் மனிதி அமைப்பைச் சேர்ந்த முத்துசெல்வி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காட்பாடி, அணைக்கட்டு மற்றும் கே.வி.புரம் உள்ளிட்ட தொகுதிகளில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சம அளவில் உள்ளதாகவும், ஆனால், சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்களில் 20 பெண்கள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக அரசியல், நிர்வாகம், சட்டப்பேரவை என அனைத்திலும் பாலினச் சமத்துவம் என்பதே இல்லை என்றும், அதற்கான எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

எனவே, சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கல் கோரி தமிழக அரசுக்கும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், இது சட்டம் இயற்றி அமல்படுத்த வேண்டிய விவகாரம் என்பதால் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டுமென விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுத்துக் கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே