இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு கட்டமாக தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் 3ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், மதுபானக்கடைகள் உள்ளிட்டவையும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டுப்பாடுகள் அற்ற பகுதிகளில் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் அற்ற பகுதிகள் எவை என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்ய இ-பாஸ் அனுமதி தேவையில்லை என்றும், மாஸ்க் அணிந்தும் தனி மனித இடைவெளியுடனும் சுதந்திர தினத்தை கொண்டாடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.