கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாமா?- சுகாதாரத் துறை விளக்கம்

முதல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி ரூ.150 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவையில் மார்ச் 12-ம் தேதி முதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாகச் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறும்போது, “கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள், அசல் ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். 45 வயது முதல் 59 வயதுள்ளவர்கள், தங்களுக்கு இணை நோய் உள்ளது என்பதற்கான மருத்துவச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது. அந்தக் காலகட்டத்தில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகும். அதன்பிறகு ரத்த தானம் அளிக்கலாம்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே