பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்

மாட்டுச்சாண சிப் செல்போன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்டு 600 விஞ்ஞானிகள் ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ராஷ்டீரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா சில தினங்களுக்கு முன்பு மாட்டு சாணத்தை கதிர்வீச்சு எதிர்ப்பு பொருள் என்று வர்ணித்து, மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இந்த மாட்டு சாண சிப் அனைவரையும் பாதுகாக்கும் என்றும் இது கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த கதிர்வீச்சு எதிர்ப்பு சிப் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கினார்.

இந்நிலையில் 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான கல்வியாளர்கள் கூட்டாக ராஷ்டிரிய காம்தேனு ஆயோக்கின் தலைவரான வல்லபாய் கதிரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில் மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது குறித்து எத்தனை பேரிடம், எங்கு, எப்போது பரிசோதனை நடத்தப்பட்டது என ஆதாரம் கேட்டுள்ளனர்.

மேலும் இந்த சிப்பை உருவாக்கிய முதன்மை புலனாய்வாளர்கள் போன்ற விவரங்களையும் கேட்டுள்ளனர்.

கண்டுபிடிப்புகள் எங்கு வெளியிடப்பட்டன? தரவு மற்றும் சோதனை விவரங்களை வழங்க முடியுமா என்றும் கடிதத்தில் விஞ்ஞானிகள் கேட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே