கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் ஏற்க முடியுமா?? – உயர்நீதிமன்றம் கேள்வி

தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்க முடியுமா ? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அவற்றைத் தடுக்கும் முதன்மை பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உயிர் காக்கும் சேவைகளில் ஈடுபட்டுள்ள இந்த முதல்நிலைப் பணியாளர்களுக்கு முழு உடல்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணையின் போது சுகாதாரத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நாள்தோறும் 15 ஆயிரம் பிபிஇ- முழு கவச உடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் மருத்துவ பணிகளில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் ஷிப்ட் அடிப்படையில் 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழக காவல்துறையினர் 7 ஆயிரத்து 850 பேருக்கு முகக்கவசம், கையுறை வழங்குவதற்காக ரூ.50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசு ஏற்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இது தவறானது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கான செலவுகளை அரசே ஏற்க முடியுமா?

தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?

அதிக கட்டண வசூல் தொடர்பான புகார்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் எத்தனை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, விரிவான அறிக்கை தாக்கல் செய் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் கரோனா நோய்த் தொற்று சிகிச்சை தொடர்பாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு அறிவுரைகள், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே