10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வாகனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட 10 முக்கிய துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் அறிவிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் எவ்வளவு உற்பத்தி செய்கின்றனவோ, அதனடிப்படையில் சலுகைகள் வழங்கப்படும்.
மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். ஏசி, எல்இடி பல்பு உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஜவுளி, உணவுப்பொருள் தயாரிப்பு, பதப்படுத்தல் ஆகிய துறைகளும் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வருகின்றன.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.