ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை தாக்கல் செய்த மனுவில், பொது முடக்க காலத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது, என் மீதும், நண்பர்களும் மீதும் கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்தனர். பொது இடங்களில், நடைபாதையில் சீட்டு விளையாடினால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்ததன் மூலம் தற்கொலைகள் தடுக்கப்பட்டும், குடும்பங்களின் வறுமையை போக்கப்பட்டு உள்ளன.
தற்பொழுது ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி சீட்டு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் பணத்தை மையமாக வைத்து நடைபெறுகின்றன.
இந்த இணைய தளம் விளையாட்டுகள் மூலம் பலரின் பணம் சூறையாடப்படுகிறது.
குறிப்பாக வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும் , அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் பாதிக்கிறது. இணைய தள சூதாட்டங்கள் சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தெலுங்கான மாநிலத்தில் இணைய தள சீட்டு விளையாட்டை அரசு தடை செய்துள்ளது.
எனவே மத்திய அரசும், தமிழக அரசு இணைய தள சீட்டு விளையாட்டு, பணத்தை மையமாக வைத்து விளையாடப்படும் சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.