நியாய விலைக்கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா்.
இந்த அறிவிப்பின்படி, குடும்ப அட்டையில் உள்ள நபா்களுக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன.
சலவை செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இந்த முகக் கவசங்கள் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமாக அளிக்கப்பட இருக்கின்றன.
அதன்படி முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவலில், முதல்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் முகக் கவசங்கள் அளிக்கப்பட உள்ளன.
சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதியில் மட்டும் இந்தத் திட்டம் பின்னா் செயல்படுத்தப்படும்.
சென்னையைத் தவிா்த்து இதர பகுதிகளில் வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி முகக் கவசங்கள் நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.