BREAKING : திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை…

திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், உள்ளே இருந்த ஒட்டுமொத்த தங்க, வைர நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடை, 5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு செயல்பட்டு வருகிறது.

நேற்றிரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் 6 காவலாளிகள் கடைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர்.

காலையில் மீண்டும் கடையை திறந்து பார்த்த போது, நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கடையின் மேற்கு பகுதியில் உள்ள சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு ஆள் நுழையும் அளவுக்கு போடப்பட்டிருந்த அந்த துளை வழியாக உள்ளே சென்று மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தில் வடமாநிலக் கொள்ளைக் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு 40 முதல் 50 கோடி ரூபாய் வரை இருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

லலிதா ஜூவல்லரியில் மொத்தம் மூன்று தளங்கள் உள்ள நிலையில் முதல் தளத்தில் உள்ள ஒட்டு மொத்த தங்க, வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக் கடை வளாகம் மற்றும் கடைக்குள் இருக்கும் சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மோப்ப நாய் மோப்பம் பிடிக்க முடியாத வகையில் கொள்ளையர்கள் வழியெங்கும் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர்.

திருச்சியில் பரபரப்பான இடத்தில் உள்ள நகைக் கடையில் நடைபெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இரு கொள்ளையர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்றிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஒன்றே முக்கால் மணி நேரம் வரை, கொள்ளையர்கள் கடைக்குள் இருந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடைக்குள் நுழைவதற்காக போடப்பட்ட துளை அருகே சில கொள்ளையர்கள் நின்று கொண்டு உதவி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே