சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-க்கு மூன்று முறை கால் வந்துள்ளது.
அதில் பேசிய நபர் முதலமைச்சரின் வீட்டில் தான் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் முடிந்தால் அதனை கண்டுபிடித்து எடுங்கள் என கூறி போனை துண்டித்து வைத்துவிட்டார்.
கால் வந்த நம்பரை போலீசார் ட்ரேஸ் செய்தபோது அது சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் (33) என்பவருடைய மொபைல் எண் என தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, முதலில் இல்லை என மறுப்பு கூறியவர் பின்பு தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் விசாரணையில் அவரது மனைவி அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும் அதனால் கோபமடைந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைப் பழி வாங்குவதற்காக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இவர் கடந்த 2019-ம் ஆண்டு இதே போல இரண்டு முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து முதல்வர் வீடு மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
அவரிடம் சேலையூர் போலீசார் விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.