நான் உயிருடன் இருக்கும் வரை பாஜக உள்ளே வர முடியாது – மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன் என அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

மம்தாவின் ஆட்சியை அகற்றிவிட்டு தங்கள் ஆட்சியை மேற்குவங்கத்தில் முதன் முதலாக நிறுவ பாஜக திட்டமிட்டு வருகிறது.

இதற்காக அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

மம்தா பானர்ஜி பாஜவுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார். மால்டாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

”பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால் கலவரம் தான் நடக்கும். கலவரம் நடக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

ஆனால் நீங்கள் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க முடியாது. ஏனெனில் மம்தா பானர்ஜி தனியொரு பெண் அல்ல.

என் பின்னால் மக்கள் திரண்டுள்ளனர். மேற்குவங்கத்தில் நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன். இது உறுதி.” எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே