ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடல்கூறு ஆய்வின் போது எடுத்த வீடியோவை நக்கீரன் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்ததையடுத்து தமிழக அரசு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என தெரிவித்தது.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவினால் உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் விசாரணையில் இறங்கிய நிலையில் பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
விசாரணை நடந்து வரும் நிலையில், இந்தக் கொடூர கொலை சம்பவத்தில் நியாயத்தை நோக்கிய நக்கீரனின் முயற்சியில், காண்போரை அதிர வைக்கும் வீடியோ கிடைத்துள்ளது.
உடல்களை மேஜிஸ்ட்ரேட் ஆய்வு செய்கையில் எடுக்கப்பட்ட BLUR செய்யப்படாத வீடியோ இங்கே… அந்த வீடியோ குறித்தும் வெளிவராத பல உண்மைகள் குறித்தும் நக்கீரன் ஆசிரியர் விளக்குகிறார்…
மிருகத்தனமான தாக்குதலை விட கொடூரமான முறையில் இருவரின் புட்டங்களை அடித்து சதை, தோல் என கிழித்தெரியப்பட்டுள்ளது. பின்பகுதியில் சதைபகுதியே இல்லாமல் இருந்துள்ளது.
குறிப்பாக ஜெயராஜ் முகத்தின் ரத்தக்காயங்கள் இருந்துள்ளது. உடல்கூறு ஆய்வின் போது உடன் இருந்த ஜெயராஜ்மருமகன்கள் அழுது துடிக்கும் காட்சிகள் வீடியோ பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது.
அந்த அளவுக்கு மோசமான சித்தரவதைகளை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அனுபவித்துள்ளனர்.
இது கைது செய்யப்பட்டு சாதாரணமாக அடித்துக்கொள்ளப்பட்டது அல்ல; கொடூரத்தின் கொடூரம் என நக்கீரன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொலை வழக்கில் எந்த தடைவந்தாலும் இரண்டு பேருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.