சைவ உணவுதான் உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்படுகிறது. அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.

அசைவ உணவு வகைகளில் புரத சத்து அதிகம் உள்ளது. உடலின் இயக்கம் சீராக நடைபெறுவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது.

விலங்குகளில் உள்ள புரதங்களில் அனைத்து விதமான அமினோ அமிலங்களும் இருக்கின்றன.

அவை உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆனால் தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்களில் அவற்றின் அளவு குறைவாகவே இருக்கும்.

உடலில் புரதத்தின் அளவு குறையும்போது உடல் பலவீனம், கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு புரத பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி தடைபடும்.

வளர்சிதை மாற்ற விகிதமும் பாதிப்புக்குள்ளாகும். ஆதலால் உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதற்கு அசைவ உணவு சாப்பிடுவது அவசியமானது.

ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றில் இரும்பு சத்து அதிகமிருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மூளையின் சீரான செயல்பாட்டுக்கும் இரும்பு சத்தின் பங்களிப்பு இன்றியமையாதது.

அசைவ உணவு வகைகளில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எலும்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான கால்சியம் சைவ உணவை விட, அசைவ உணவு வகைகளில் அதிகம் கலந்திருக்கும்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான் கால்சியம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இரும்பு, கால்சியம் தவிர அசைவ உணவுகளில் துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.

அவை உடலின் பல்வேறு பாகங்களின் சீரான செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு கொண்டவர்கள் அசைவ உணவை தவிர்க்கக்கூடாது.

அதேவேளையில் அசைவ உணவை சாப்பிடுவதால் பக்கவிளைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அதாவது இறைச்சி உணவு வகைகளை அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சிவப்பு இறைச்சி போன்ற உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும். சிவப்பு இறைச்சியில் இருக்கும் கொழுப்பு தமனிகளை அடைத்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அசைவ உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஏனெனில் அசைவ உணவு வகைகளில் கலந்திருக்கும் அதிகமான புரதத்தை ஜீரணிப்பது செரிமான அமைப்புக்கு கடினமான பணியாகும்.

தொடர்ச்சியான அசைவ உணவு பழக்கம் ஆயுட்காலத்தை குறைத்துவிடும். உடல் பருமன் பிரச்சினையையும் உருவாக்கும். அதனால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதற்கு அடிமையாகிவிடாமல் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே