மோகன்லால் இயக்கத்தில் தொடங்கிய பரோஸ் 3டி – அமிதாப் பச்சன் வாழ்த்து

நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரோஸ்’ திரைப்படத்துக்கு மூத்த பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். தேசிய அளவில் சிறந்த நடிகர் என்றும் பெயர் பெற்றவர். முதல் முறையாக ‘பரோஸ்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கான மாயாஜாலப் படமாக இது உருவாகிறது.

மோகன்லால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, பிரித்விராஜ், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். இந்தப் படம் புதன்கிழமை காலை பூஜையுடன் தொடங்கியது.

முன்னதாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவது குறித்து மோகன்லால் ஒரு காணொலியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், இதில் சினிமா தனது வாழ்க்கையாகவும், வாழ்வாதாரமாகவும் ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

சிறிது நேரத்தில் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மோகன்லாலுக்குத் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்தார். “உயர்ந்த (கலைஞரான) மோகன்லாலின் முதல் இயக்கமான பரோஸுக்கு என் வாழ்த்துகள். வெற்றி, செழிப்பு மேலும் அதிக மேன்மை கிடைக்கட்டும்” என்று அமிதாப் பச்சன் வாழ்த்தினார்.

இதற்கு பதிலளித்த மோகன்லால், “உங்களது அன்பார்ந்த செய்தியைப் பெரிய நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்களை என்றும் நான் மனதில் மகிழ்ச்சியோடு வைத்திருப்பேன். உங்களுக்கு என் நன்றி. உங்கள் மீதான எனது மதிப்பையும், மரியாதையையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே