பாலை வன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும் – ககன்தீப் சிங் பேடி

பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும் என தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெட்டுக்கிளிகள் வருகை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெட்டுக்கிளிகள் காணப்பட்டது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் என தெரிவித்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில், நேற்று மாலை, ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன.

இவை, வட மாநிலங்களில் இருந்ததை போல, பழுப்பு நிறத்தில் இருந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் வெட்டுக்கிளி பிரச்னை குறித்து முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு.

பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஜூலை வரை இருக்கும். வடமாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கம் அதிகமாக உள்ளது.

பீஹார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் தெற்கு பகுதியில் வெட்டுக்கிளி ஆபத்து குறைவாக உள்ளது.

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள். தமிழகத்தில் 200 வகையான வெட்டுக்கிளிகள் உள்ளன.

தமிழகத்தில் நன்மை செய்யும் வெட்டுக்கிளி வகைகளும் இருக்கலாம். மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

வெட்டுக்கிளி வந்தால், அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே