மதுரையில் அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அதிகாரிக்கு கொரோனா தொற்று எதிரொலியாக சிபிசிஐடி அதிகாரிகள் கோவைக்கு திரும்பியுள்ளனர். அங்கொடா லொக்கா வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் வழக்கு விசாரணை தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கை தாதா அங்கொட லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமானது. கோவை தனியார் மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்டு திரிந்ததாக சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.
இலங்கை தாதா அங்கொட லொக்காவின் உடலை போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி மதுரையில் தகனம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் பயன்படுத்திய போலி ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மதுரையில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், அங்கொடா லொக்கா துபாய் தப்பி செல்வதற்கும், ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரிக்க மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாம சுந்தரி மூளையாக செயல்பட்டுள்ளார்.
அங்கொடா லொக்காவிற்கு அடைக்கலம் கொடுத்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, இலங்கையிலிருந்து மதுரைக்கு வரும் நபர்களை வரவேற்க அடிக்கடி விமான நிலையம் சென்று வந்துள்ளார். இது குறித்து கார் ஓட்டுநர் ஒருவர், அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார், மதுரை விமான நிலையத்தில், விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும், சிபிசிஐடி போலீசார் விமான நிலையத்தில் பதிவான CCTV கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விசாரணை குழுவுக்கு உதவிய மதுரை சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.