தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தபோதும் இன்னும் அதிகரித்து வருகிறது.
நாட்டிலேயே தமிழகம் கொரோனா தொற்று பாதிபில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
தொற்று குறையாத காரணத்தினால் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நோய்க் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
விதிமுறைகளை மீறினால் அது குற்றமாக கருதப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசர சட்டம் பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் தளர்வுகள் பெரிய அளவில் அறிவிக்கப்பட்டு, மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
பொது போக்குவரத்தும் துவங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு பணிக்கு திரும்பி வருகின்றனர்.
இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கும் தற்போது ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பது குறித்து மாவட்டக் கலெக்டர் மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசிப்பது வழக்கம்.
இதையடுத்தே எந்த முடிவும் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.