கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுக! உயிரிழந்த மருத்துவரின் மனைவி உருக்கமான பேட்டி

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, முதலமைச்சர் உதவ வேண்டும் என அவரது மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர் சைமன் ஹர்குலசின் உயிரிழந்தார்.

அவரது உடலை, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவிடாமல் நடைபெற்ற வன்முறை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரது மனைவி ஆனந்தி சைமன் உருக்கமாக பேசியபடி வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவரின் உடல் புதைக்கப்படுவதைக் கூட கண்ணால் பார்க்க கூட முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

தனது குடும்பத்தினருடன், மருத்துவர் சைமன் கடைசியாக பேசிய வீடியோ அழைப்பில், ஒருவேளை மீண்டு வரவில்லை என்றால், அவரது மதச் சடங்குகளின்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யுமாறு கூறியதாக ஆனந்தி சைமன் உருக்கமாக தெரிவித்தார்.

இதனால், தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என ஆனந்தி சைமன் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே