வரும் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு, நாடு முழுவதும் 230 ரயில்கள் ஏற்கனவே இயங்கப்பட்டுவருகின்றன.
அதில் தமிழகத்திற்கான ரயில் சேவை வரும் 11ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த ரயில் சேவைக்கான தேவை அதிகரிக்கிறது என்பதை கண்காணித்து வருவதாகவும், அதிகம் பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருப்பதை தவிர்க்க அவர்களும் பயணிக்கும் வகையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக ரயில்களை கூடுதலாக இயக்க மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கை வரும் பட்சத்தில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் குறிப்பிட்டுள்ளார்.