அச்சு அசலா சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்றே இருக்கும் நபர்: வைரல் போட்டோ.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்று இருக்கும் நபரின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
யார் வாரிசும் இல்லாமல், யார் ஆதரவும் இன்றி சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து சாதித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ம் தேதி மும்பையில் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை, பாலிவுட்டில் இருக்கும் பெரியாட்கள் சேர்ந்து அவரின் கெரியரை நாசம் செய்து இப்படி ஒரு விபரீத முடிவை எடுக்க தூண்டிவிட்டனர் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுஷாந்தின் மரணம் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது குறித்து சிபிஐ விசாரணை கோரி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பார்க்க சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்றே இருக்கும் நபரின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்றே இருக்கும் நபரின் பெயர் சச்சின் திவாரி. சுஷாந்த் இறந்த பிறகு சச்சின் திவாரியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியந்துள்ளனர். சுஷாந்த் இறப்புக்கு பிறகு சச்சினை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சுஷாந்தின் ரசிகர்கள் தன் மீது காட்டும் பாசத்தை பார்த்த சச்சின் திவாரி கூறியிருப்பதாவது,

இது போன்ற அளவு கடந்த அன்பை நான் எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
சச்சினை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சிலரோ ஒரேயொரு சுஷாந்த் தான், எங்களால் வேறு யாரையும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலியிடம் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி மும்பை போலீசார் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் 20 கேள்விகள் கேட்கப்பட்டதாம்.

சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களில் இருந்து சுஷாந்த் சிங் ராஜ்புட் நீக்கப்பட்டதற்கான காரணத்தை போலீசார் கேட்டறிந்துள்ளனர். சுஷாந்த் பிற படங்களில் பிசியாக இருந்ததால் தன் படத்தில் முழு கவனம் செலுத்த முடியாமல் போனது. அதன் பிறகே அந்த வாய்ப்பு பிற நடிகர்களுக்கு கொடுக்கப்பட்டது என்று சஞ்சய் லீலா பன்சாலி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சுஷாந்தின் மரணம் தொடர்பாக மும்பை போலீசார் இதுவரை 34 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே சுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பேச்சாரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ட்ரெய்லரில் சுஷாந்தின் சிரித்த முகத்தை பார்த்த ரசிகர்களால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
கிரிக்கெட் வீரர் தோனி நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சுஷாந்தின் ரசிகர்களோ அவர் தோனி படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிக அளவில் ஷேர் செய்தனர்.

தோனி படம் மூலம் தான் சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்தியா முழுவதும் பிரபலமானார். அந்த படத்திற்காக சுஷாந்த் ஒன்றரை ஆண்டுகளாக தோனியாகவே வாழ்ந்ததாக கூறப்பட்டது. தோனியின் ஸ்பெஷலான ஹெலிகாப்டர் ஷாட்டை சுஷாந்த் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே