#AarogyaSetu : கொரோனா வைரஸை டிராக் செய்யும் செயலி..!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நான்காயிரத்தை நெருங்கியுள்ளது.

பரிசோதனைகள் அதிகரிக்க, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, வீட்டில் தங்களை தனிமைபடுத்திக்கொள்வதே மருந்து என்று அரசு, ஊரடங்கு நிலையை பிறப்பித்துள்ளது.

மேலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது.

MyGov என்ற செயலி மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை அரசு, மக்களுக்கு வழங்கிய நிலையில், தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு இந்த செயலியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

Aarogya Setu என்ற பெயரிலான செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தபின்னர், ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டும்.

மேலும், அருகில் உள்ள கொரோனா பாதிப்பு இடத்தின் தூரத்தையும் செயலி காட்டும்.

மேலும், கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்ற குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது.

நமக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தால் கூட இந்த ஆப், நம் தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும்.

இருப்பினும், நமது தகவல்களை மூன்றாம் நபர்களால் பார்க்க முடியாது என இதன் தனியுரிமை கொள்கை உறுதி அளிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே