ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது.
முன்னதாக முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.
கேப்டன் கே.எல். ராகுல் 69 பந்துகளில் 7 சிக்ஸா், 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்தாா்.
இது, ஐபிஎல் போட்டியில் கே.எல். ராகுல் அடித்த 2-ஆவது சதமாகும். பின்னா் ஆடிய பெங்களூா் அணி 17 ஓவா்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பெங்களூருக்கு எதிராக சதமடித்த பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் ஐபிஎல் போட்டியில் 2,000 ரன்களைக் கடந்தாா்.
ராகுல் தனது 60-ஆவது இன்னிங்ஸில் 2,000 ரன்களை எட்டியதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய இந்தியா் என்ற பெருமையைப் பெற்றாா்.
முன்னதாக சச்சின் 63 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.