கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தொற்று பரவல் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
55 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும்; தேசிய கல்விக் கொள்கை, அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்ட விவகாரம்; இறுதி செமஸ்டர் தேர்வுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.