அடுத்து வரும் தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
உலக அளவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது உலக நாடுகளை பீதியடையச் செய்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கரோனா தொற்று நோய் என்பது உலகின் கடைசி தொற்று நோய் அல்ல எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “இனி வர உள்ள தொற்று நோய்களுக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
மேலும் தொற்று நோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பொதுசுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கெப்ரேயஸ் கேட்டுக் கொண்டார்.
“கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் பொதுசுகாதார நடவடிக்கைக்கு உலக நாடுகள் அதிக முதலீடுகளை செலுத்த வேண்டும்.” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
உலகளவில் இதுவரை 2 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரத்து 982 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.