காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதனை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
2019 லோக்சபா தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார்.
இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
இருப்பினும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது காங்கிரஸில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அந்த கட்சியின் இமேஜையும் தொடர்ந்து பாதித்து வந்தது. இதனிடையே காங்கிரஸில் சீனியர்களுக்கும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்களான ஜூனியர்களுக்கும் இடையே மோதல் போக்கு உக்கிரமடைந்தது.
அண்மையில் 20க்கும் மேற்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர், கட்சி உட்கட்டமைப்பில் முழுமையான மாற்றம் தேவை எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வகையில், இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் நாளைய செயற்குழு கூட்டம் சோனியாவின் ராஜினாமாவை ஏற்கும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில் சோனியா காந்தி இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மறுப்பும் தெரிவித்துள்ளனர்.