இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசின் இ பாஸ் முறை தளர்வால் கொரோனா தடுப்பு பணியில் உள்ள சுகாதாரத்துறையினருக்கு பெரும் சவால் ஏற்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ பாஸ் முறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து இ பாஸ் பெறுவது மிகவும் எளிமையாக்கப்பட்டது.

இருப்பினும் இதிலும் முறைகேடுகள் நிகழ்கின்றன என்பது குற்றச்சாட்டு.

இந்த நிலையில் இ பாஸ் முறையை கைவிட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டது. இதனை ஏற்று புதுவை அரசு இ பாஸ் முறையை ரத்து செய்தது.

ஆனால் தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்யப் போவதில்லை என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோவையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சச்ர் வேலுமணி ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

கோவையில் 6,312 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன கோவையில் 8,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதேபோல் கொரோனா நோயாளிகளைக் கண்டறிய நாள்தோறும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.

அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிவது என்பது உயிர் கவசத்தை அணிவது போன்றது.

இ பாஸ் முறையில் மத்திய அரசு தளர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இது சுகாதாரத்துறையினருக்கு பெரும் சவாலானதாக இருக்கும். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே