லோக்காண்டோ இணையதளத்தில் பெண்ணின் செல்போன் எண்ணை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தரமணியை சேர்ந்த பெண்ணின் செல்போன் எண்ணை லோக்காண்டோ என்ற இணையதளத்தில் பதிவிட்டு அவரை ஆபாசமாக சித்தரித்தது தொடர்பாக அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புலன் விசாரணையில் லோக்காண்டோ இணையதளத்தை தொடர்பு கொண்டு பெண்ணைப் பற்றி ஆபாசமாக பதிவிட்டவர் குறித்து தகவல் பெறப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை தரமணியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் மகன் சூரிய நாராயணனை இன்று கைதுசெய்து விசாரித்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல இணையதளங்களில் ஆபாசமாக பதிவிடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.