கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க – வில் மாவட்டங்கள் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அந்த வகையில் திருச்சி கிழக்கு , மேற்கு மற்றும் துறையூர் தொகுதிகளைக் கொண்ட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டார்.
அடுத்தாக மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி தொகுதிகளைக் கொண்ட புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார் நியமிக்கப்பட்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம், முசிறி மணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார்.
இவர்கள் அறிவிக்கப்பட்டத்தில், பல்வேறு பிரச்னைகள் அ.தி.மு.க நிர்வாகிகளுக்குள் ஏற்பட்டுள்ளது. எம்.பி குமார், புறநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க – வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள்.
குமார் கலந்து கொண்ட கூட்டத்தில் என்ன நடந்தது என்று லால்குடி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம்.
புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி குமார், பதவி ஏற்ற பின்பு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க வந்தார். இங்கு சூப்பர் நடேசன் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார்.
முன்னாள் ஒன்றிய செயலாளரான குணசீலனும் அவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்குள் நீண்ட நாள்களாகப் பிரச்சனை நீடித்துவருகிறது.
இந்தநிலையில் இன்று மாவட்டச் செயலாளர் குமார் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், குணசீலனின் ஆதரவாளர்கள், `சூப்பர் நடேசன் இன்று வரையிலும் கட்சியில் பெரிதாகச் செயல்படாதவர்.
அவரை ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கினால்தான், இப்பகுதியில் கட்சியை வளர்க்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். பதிலுக்கு சூப்பர் நடேசனின் ஆதரவாளர்கள் உங்களைப் போன்றோர்களால்தான் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது.
என்றும் , உங்களை அடிப்படை பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்போது குணசீலனின் ஆதரவாளர்கள், நீங்கள் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் கைக்கூலி என்று சொல்ல, இரு தரப்பினருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அ.தி.மு.க நிர்வாகிகளைச் சமாதானப்படுத்த முடியாமல் மாவட்டச் செயலாளர் குமார் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளைச் சமாதானம் செய்ய முடிக்க முடியாதவர் எப்படி கட்சிக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படி வெற்றி பெறப்போகிறார் என்று அங்கிருந்த தொண்டர்கள் புலம்பி வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள், இந்நாள் ஒன்றியச் செயலாளர்கள் இருவருக்குள் நீண்டநாள்களாக பிரச்னை நீடித்துவருகிறது. இது, கட்சிக்குள் சாதிரீதியான புதுப் பிரச்னையாக உருவாகிக்கொண்டிருக்கிறது.
இவ்விகாரத்தை மாவட்டச் செயலாளர் சுமுகமாகப் பேசிமுடித்தால் நல்லது இல்லையேல் தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிரொலிக்கும் என்கின்றனர்.