தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2020-21 கல்வியாண்டு முதுகலை மற்றும் முது அறிவியல் பட்டப்படிப்புகள் (தமிழ், வரலாறு மற்றும் தொல்லியல், மெய்யியல், மொழியியல், நிகழ்த்துகலை) ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்புகள் (தமிழ், வரலாறு) முதுநிலை பட்டயம், சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டம் போன்றவற்றிக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
இதில் ஒருகிணைந்த பட்டப்படிப்புக்கு 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் விரும்பினால் 3 ஆண்டுகள் முடித்து இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ளலாம்.
முதுநிலை மற்றும் ஒருகிணைந்த படிப்பில் தமிழ் துறையை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களில் முறையே 20 மற்றும் 25 மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து தமிழக அரசு உதவியுடன் மாதம் ரூ.2000 சிறப்பு ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இணையவழி சேர்க்கை www.tamiluniversity.ac.in என்ற முகவரியில் நடைபெறுகிறது.
இதில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேரலாம்.
அல்லது விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.