நீதிமன்ற உத்தரவை மீறி 100% கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகளின் விவரங்களை வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
அதேசமயம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முழுக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த உத்தரவினை தொடர்ந்து முழு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்த விவரங்களை சேகரிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.